இசைப்பிரியர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவரும் , மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளருமான பத்மஸ்ரீ இளையராஜாவின் பேரன் யத்தீஷ்வர் ராஜா தான் இசையமைத்து எழுதிய ‘நமசிவாயா’ என்ற முதல் பக்தி இசை தொகுப்பை திருவண்ணாமலையில் வெளியிட்டார்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் பிரபல இசையமைப்பாளர்கள் அவர்.
இதில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மூத்த மகன் யத்தீஷ்வர் ராஜா. இவர் இசை துறையில் கவனம் செலுத்தி வருகிறார். திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையாரை போற்றும் விதமாக ‘நமசிவாயா’ என்ற பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் யத்தீஸ்வர் ராஜா பாடி வெளியிட்டு உள்ளார். இந்நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, அவரது மனைவி ராஜ்வி, இளைய மகன் ஜெய்தீஸ்வர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக இளையராஜாவின் பேரனும் கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஸ்வர்ராஜா கூறுகையில், தனக்கு பக்தி பாடல் பாட வேண்டும் என்ற ஆசையில் முதல் பாடலை அண்ணாமலையார் குறித்து பாடியது தனக்கு மிகுந்த பெருமையாக உள்ளதாகவும், இதற்காக தாத்தா பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாகவும் கூறியவர், தந்தையின் உதவியோடு 2 நாட்களில் அனைத்தும் நிறைவடைந்ததாகவும், சினிமாவில் பணிபுரிய தனக்கு ஆசையாக உள்ளதாகவும், வாய்ப்பு கிடைத்தால் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்வேன் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக மேற்கத்திய பாணி இசையில் அதிக நாட்டம் உள்ளது. இதையடுத்து ஆல்பம் மற்றும் திரை இசையில் வாய்ப்புகள் என்று அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட உள்ளேன் என்று கூறினார்.
தொடர்ந்து இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கூறுகையில்
தமிழக மக்களுக்கு இளையராஜா உயிர், இளையராஜாவிற்கு தமிழ் மக்கள்தான் உயிர். இன்று எனது மூத்த மகன் யத்தீஸ்வர் ராஜா அண்ணாமலையாரை போற்றும் விதமாக “நமச்சிவாய” என்ற பாடலை எழுதி இசையமைத்து இன்று வெளியிட்டுள்ளார். அவரை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்
இசையமைப்பாளர் யத்தீஸ்வர் ராஜாவிற்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் டிவிஎஸ். ராஜாராம் திருக்கோயில் பிரசாதம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் ஆசிரம நிர்வாகி சுசிலா ரமணன் , காமலாச்சி பாண்டுரங்கம் பார்மசி காலேஜ் மேலாளர் செந்தில் நடராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
