நாமக்கல் :
தமிழகத்திற்கு வரவேண்டிய, ரூ. 2,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டப் பொதுகுழுக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் வடிவேல் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் முருக செல்வராசன் பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில அரசின் முழுப்பொறுப்பிற்கு கொண்டு வருதல் வேண்டும். மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய ரூ.2,500 கோடி அளவிலான கல்வி பங்குநிதியை உடன் வழங்க வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தேர்தல் அறிக்கை உறுதிமொழியின்படி உடனடியாக வழங்க வேண்டும், என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு, மாநிலச்செயற்குழு உறுப்பினர் தேவகி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாரதி உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.