நாமக்கல்:
மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில், மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து,
அரசு மானியத் திட்டங்களை பெற்று வருகின்றனர். மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பினை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், மீன் உற்பத்தி மூலதனமான மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கும் வகையில், மீனவர் நலத்துறை அமைச்சர் மூலம் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என, சட்டசபை கூட்டத்தொடரில் மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1 எக்டேருக்கு அதிகபட்சமாக 10,000 மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 5,000 மானியமாக வழங்கப்படவுள்ளது.
எனவே, நாமக்கல் மாவட்டத்திலுள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடையலாம். இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கும், விண்ணப்பங்கள் பெறவும் மேட்டூர் அணையில் உள்ள மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.