Close
ஜூன் 11, 2025 5:58 காலை

அண்ணாமலையார் கோயில் பிரகாரத்தில் முட்டை பிரியாணி சாப்பிட்ட நபரால் பரபரப்பு

அசைவ உணவு சாப்பிட்ட தம்பதியினர்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்ச பூதங்களில்  அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நீண்ட தூரம் பயணித்து வந்தவர்கள் கோயிலில் தரிசனத்தை முடித்து விட்டு, கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை உண்பது வழக்கம். இல்லையெனில் தாங்கள் கட்டிக் கொண்டு வந்த உணவை கோவில் வளாகத்துக்குள் உட்கார்ந்து சாப்பிடுவதும் வழக்கம்.

இந்நிலையில்  திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் அவரது மனைவி ஆகிய இருவரும் பிரியாணி பார்சல் வாங்கிக்கொண்டு கோபுரத்திற்கு உள்ளே வந்து ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  இதனால், அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சிலர் கோயில் வளாகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் அவர்களை தடுத்து விசாரணைக்காக திருவண்ணாமலை மாநகர காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கோவில் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அண்ணாமலையார் கோவிலுக்கு உள்ளே வரும் போது கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் மற்றும் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இரண்டு நுழைவாயிலில் வழியாக வரும் பக்தர்கள் எடுத்து வரக்கூடிய பைகளை பலத்த சோதனை செய்த பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்,

அப்படி இருக்கும் பொழுது கணவன் மனைவி ஆகிய இருவரும் முட்டை பிரியாணியை எப்படி கொண்டு வந்தார்கள் என்பது பற்றி தீவிரமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணாமலையார் கோவிலில் கடந்த சில மாதங்களாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் கணவன் மனைவி ஆகிய இருவரும் முட்டை பிரியாணி வாங்கி சாப்பிட்டது ஆன்மீக பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top