Close
ஜூன் 11, 2025 8:28 காலை

தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை கோயில் தாமரை குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள தாமரைக் குளம், அதன் அழகிய சூழலுக்காகவும், பக்தர்களின் புனித நீராடலுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறது. இந்த தாமரை குளத்தில் தான் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் போது அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியம் முழங்க கோவிலில் இருந்து தாமரை குளம் வரை ஊர்வலமாக உண்ணாமலையம்மனுடன் தாமரை குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

தாமரை குளத்தை சுற்றி அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் சில வருடங்கள் அண்ணாமலையார் ராஜாமண்டபம் எழுந்தருளாமல் குளக்கரையிலேயே அபிஷேகம் மற்றும் தீர்த்தவாரி நடைபெற்று வந்தது .

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பக்தர்களின் முயற்சியால் ராஜா மண்டபம் வரை அண்ணாமலையார் செல்வதற்கு வழி ஏற்படுத்தி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள், அதன் இயற்கை அழகையும், புனிதத்தன்மையையும் கடுமையாகப் பாதித்து வருகின்றன. இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்து கழிவுகள் நேரடியாகக் குளத்தில் விடப்படுவதாகக் கூறப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அரசு கண்டறிந்தும், 46 வாரங்களுக்கும் மேலாகியும் அவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை நியமித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்த விரிவான அறிக்கையை அரசு அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அதிர்ச்சியளிக்கும் விதமாக, ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு எந்த ஆவணத்தின் அடிப்படையில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து மின்சார வாரியம் தனியாக ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தாமரை குளத்தில் ராஜா மண்டபத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார் (கோப்புக்காட்சி)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top