தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அமைச்சர் வேலு விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போது செய்யார் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தற்போது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு உள்ளிட்ட 7 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றம் எண் 1-ல் (ஜூன் 10) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உரிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அப்போதைய சட்டமன்ற வேட்பாளரும் தற்போதைய கடலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினரான விஷ்ணு பிரசாத், அவரது தந்தையும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கிருஷ்ணசாமி உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து, இந்த வழக்கை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறுகையில் 2011ஆம் ஆண்டு செய்யாறில் தேர்தல் பணிகள் நிறைவடைந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு தன் மீது பொய் வழக்கு போடப்பட்டது. அதனை கடந்த 14 ஆண்டுகளாக செய்யார் நீதிமன்றத்தில் தொடர்ந்து திருவண்ணாமலை நீதிமன்றத்திலும் வழக்காடி தற்பொழுது நீதிமன்றம் வழக்கு தவறானது எனக்கூறி ரத்து செய்து நிரபராதி என விடுவித்துள்ளது.
நாட்டில் பல்வேறு நிலைகளில் பொய் வழக்கு போடப்பட்டிருந்தாலும் நியாயமாக உள்ள நீதியரசர்கள் முறையாக விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதியை வழங்கி வருகிறார்கள் என்றார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 2011ஆம் ஆண்டு அமைச்சர் எ.வ.வேலு மீது தொடரப்பட்ட வழக்கில் எவ்வித ஆதாரமும் இல்லை என திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை முன்னிட்டு, எ.வ.வே. கம்பன் தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அப்போது அண்ணாதுரை.எம்.பி., ஜோதி.எம்.எல்.ஏ., திமுக நிர்வாகிகள் பிரியா விஜயரங்கன், சீனுவாசன், ராஜாங்கம், காலேஜ் ரவி, குணசேகரன் மற்றும் பலர் இருந்தனர்.