தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில், உறுதிமொழி குழுவின் உறுப்பினா்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), மோகன் (அண்ணாநகா்) ஆகியோா் திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட உறுதிமொழிக் குழுவினா் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.
இதையடுத்து, ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை ஆய்வு செய்த உறுதிமொழிக் குழுவினா், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சம்ப்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினா்.
அதைத் தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் உறுதிமொழிக் குழுவின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவிக்கையில்;
இந்தக் கல்லூரி ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவிகள் மருத்துவம் படித்து வருகின்றனா். ரூ.4 கோடி மதிப்பிலான கேட்டலாக் கருவி ஒரு மாத காலத்துக்குள் நிறுவப்பட்டு, இருதய நோய் சிகிச்சை அளிக்கும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டு 5 தளங்களுடன் கட்டுமானப் பணிகள் முடிவு பெற்று 8.9.2024 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கூடுதல் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்படும் என்ற சட்டப் பேரவை உறுதிமொழியின் அறிவிப்பின்படி இப்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், சாத்தனூர் அணை, பால் பவுடர் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டவர்கள் பக்தர்கள் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் விரைந்து தரிசனம் மேற்கொள்வதற்கான வழிவகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து இந்து சமய அ நிலை யத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய ஏதுவாக வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும், குறுக்கு வழியில் பக்தர்கள் செல்லாமல் திருக்கோவில் ஊழியர்கள் அதனை வரன்முறைபடுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலா் பிரகாஷ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஹரிஹரன், அறங்காவல் குழுத்தலைவர் டி.வி.எஸ்.ராஜாராம் , மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனா்.