Close
ஜூன் 13, 2025 2:03 மணி

அமைச்சருக்கு ரூபாய் மாலை : விளக்கம் அளித்த த.வெ.க மாவட்ட செயலாளர்..!

அமைச்சருக்கு ரூபாய் மாலை அணிவித்த த.வெ.க மாவட்ட செயலாளர்

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இருப்பவர் பாரதிதாசன். தற்போது மட்டுமல்ல விஜய் மக்கள் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

எஸ்ஏ சந்திரசேகருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். சந்திரசேகரின் செல்லப்பிள்ளை பாரதி என்பார்கள் திருவண்ணாமலை விஜய் ரசிகர்கள். அவரது அக்கா கூட அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்.

இந்த நிலையில் இவருடைய வீடு புதுமனை புகுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றினார்.

அமைச்சர் எ.வ வேலு

இந்த விழாவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, திருவண்ணாமலை எம்.பி., சிஎன் அண்ணாதுரை, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு பிச்சாண்டி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் ,ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அமைச்சர் எ.வ வேலுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  தொடர்ந்து த.வெ.க மாவட்ட செயலாளர், அமைச்சருக்கு  ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர். மேலும் அவரது குடும்பத்தினருடன் நின்று அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இது தொடர்பாக வீடியோ வைரலான நிலையில் பாரதிதாசன் தவெக நிர்வாகியா அல்லது திமுக நிர்வாகியா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தன் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்த அமைச்சர் எ.வ வேலுக்கு பணமாலை போட்டு வரவேற்பு அளித்த தவெக நிர்வாகி விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

இனிவரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் எதிரி திமுக மட்டும் தான் என கூறியது அல்லாமல் நிகழ்ச்சிகளிலும் திமுக அரசையும், திமுக அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தவெக மாவட்ட செயலாளரின் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

அமைச்சர் விளக்கம்

மேலும் புதுமனை புகு விழாவில் கலந்து கொண்டது குறித்து அமைச்சர் வேலு , தெரிவிக்கையில்

திருவண்ணாமலைக்கு நான் சட்டமன்ற உறுப்பினர் , எனது தொகுதியை சேர்ந்த யாராக இருந்தாலும் எனக்கு அழைப்பு விடுத்தால் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் , கட்சி பாகுபாடு இன்றி கலந்து கொள்வது வழக்கம், அதுமட்டுமல்லாமல் நீண்ட காலமாக தெரிந்த குடும்பம் , அவருடைய குடும்ப உறுப்பினர்கள் திமுகவில் உறுப்பினர்களாக உள்ளனர், அந்த வகையில் தான் இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டோம் என கூறியுள்ளார்.

மாவட்ட செயலாளர் விளக்க கடிதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top