திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும், மேலும் பல்வேறு தீர்த்த குளங்கள் அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது என்று யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் திருவண்ணாமலை மலையே சிவன் தான்! அங்கு எப்படி கழிப்பிடங்களும் கட்டிடங்களும் கட்ட அனுமதிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
இதேபோல, 14 கி.மீ. கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்களை மீட்க வேண்டும் என்று மற்றொரு வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.
தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவா், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய், காவல், இந்து சமயம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறாா்.
மேலும், மலையிலும், கிரிவலப் பாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை நேரடி கள ஆய்வு செய்து வருகிறாா். தொடர்ந்து மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து இந்த குழு ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில், மீண்டும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மலை மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு நிலவரம், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜ் ஆலோசனை நடத்தி, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
உயர் நீதிமன்ற உத்தரவு
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அரசு கண்டறிந்தும், 46 வாரங்களுக்கும் மேலாகியும் அவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை நியமித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்த விரிவான அறிக்கையை அரசு அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு எந்த ஆவணத்தின் அடிப்படையில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து மின்சார வாரியம் தனியாக ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.