தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான குடும்பங்கள் இந்த நகராட்சி தண்ணீரையே அருந்துவதற்கும், உணவு போன்ற அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 9 மற்றும் 10வது வார்டுக்கு உட்பட்ட ஆபாத் பள்ளிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இங்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் அதிலும் குறைவான நேரத்திற்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு மறுபடி நிறுத்தப்படுவதாகவும் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தங்களது வார்டு பிரதிநிதி மற்றும் நகராட்சி தலைவர் ஆகியோரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள் இன்று கை குழந்தைகளுடன், காலி குடங்களை கொண்டு வந்து நகராட்சி மேல்நிலை நீர்த்தக்க தொட்டி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரின் முக்கிய பகுதியில் ஏற்பட்ட இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அலட்சிய போக்குடன் அவர்கள் பதில் அளிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த தென்காசி நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.