ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் 13 வது பயிற்சி வகுப்பு துவக்க விழா புதுக்கோட்டை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில், அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் நோக்கமாகும். பள்ளிக் கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் மிக சிறப்பாக இத்திட்டம் செயல்பட்டு வருகின்றது. இதுவரை 360 மாணவர்கள் திட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளார்கள் என்றார்.
ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் சிகரம் சதீஸ்குமார் நிகழ்வை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள் . ஆனால், உங்களுக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் செய்வதை சிறப்பாக செய்தால் வெற்றி நம்மை தேடி வரும். உங்களுக்குள் பல்வேறு திறமைகள் குறைந்து கிடக்கின்றது, அதனை வெளிக்கொண்டு வருவதற்கு வருவதற்கு திட்டம் உங்களுக்கு மிக்க உதவியாய் அமையும். ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்பதில் இருந்து தான் அறிவியலில் தொடக்கம் ஆரம்பம் ஆகின்றது.
உங்களுக்கு கேள்வி கேட்கும் திறனையும் அறிவியல் மனப்பான்மையையும், அறிவியல் விழிப்புணர்வையும் நிச்சயமாக ஏற்படுத்தும். அலசி ஆராய்ந்து நன்கு யோசித்து உங்களின் முடிவெடுக்கும் திறனை வளர்க்க” ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் உங்களுக்கு சொல்லித் தரும் என்றார் அவர்.
புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலாளர், பேராசிரியர் எஸ்.விஸ்வநாதன் மற்றும் சந்தபேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் ஆசிரியர் பா.மீனா அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப அலுவலர், கேஸ்.பிரிட்டோ நன்றி கூறினார். இந்த பயிற்சி வகுப்பில் புதுக்கோட்டை சந்தபேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 30 மாணவிகள் பங்கேற்கிறார்கள்.