காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே , காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளால் அதிரடியாக மீட்கப்பட்டது.
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்கள் நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ளது.
பலர் அத்துமீறி அனுமதி இன்றி கடைகள் அமைத்து செயல்பட்டு வந்தனர். கோயில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அவ்வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான, உலகளந்தார் மாட வீதியில் இரண்டு கடைகளை அத்துமீறி தணிகைவேல் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து டீக்கடை மற்றும் சலவை நிலையம் அமைத்தும் செயல்பட்டு வந்தார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் ஆக்கிரமிப்பினை அகற்ற செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அவ்வகையில், இன்று செயல் அலுவலர்கள் திருக்கோயில் பணியாளர்கள், காவல்துறை உதவியுடன் அந்த இரண்டு கடைகளில் இருந்த பொருட்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்றி அக்கடைக்கு சீல் வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிக பகுதியில் பல்வேறு ஆக்கிரமிப்புகளும் உள்ள நிலையில் விரைவில் அகற்ற உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது