Close
ஜூன் 18, 2025 8:34 மணி

திருவண்ணாமலையில் பார்க்கிங் வசதி செய்து தர விக்ரம ராஜா வலியுறுத்தல்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா

திருவண்ணாமலையில் வெளியூர் வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், இந்த மாவட்டத்தில் பல்வேறு சாலை சீரமைப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு துரிதமாக எடுத்து வருகிறார். அதற்கு தமிழ்நாடு வணிகர்களின் பேரமைப்பு சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லை.

எனவே, தமிழக அறநிலையத்துறை உள்ளூா் மற்றும் வெளியூா் வாகனங்கள் நிறுத்த இட வசதியை செய்து தர வேண்டும்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் மாநாடு, கூட்டங்கள் நடத்தும்போது அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளை மூடச் சொல்லும் நிலைப்பாட்டை தவிா்க்கவேண்டும்.

தமிழக முதல்வா் 24 மணி நேரமும் கடைகளைத் திறக்கலாம் என்று கூறியுள்ள நிலையில், போலீஸாா் இரவு 11 மணிக்குள் கடைகளை அடைக்குமாறு கூறுகின்றனா். இதை ஏற்க முடியாது.

போலீஸாா் கடைகளை மூட வேண்டும் எனக் கூறுவதை விட்டுவிட்டு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்துப் பிரிவில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும்.

அதேபோல, நகை அடகு வைத்தவர்களுக்கு அதனை திரும்பப் பெறுவதற்கு பல்வேறு சட்டங்கள் போடப்பட்டுள்ளன. அந்த சட்டத்தை கட்டாயம் திருத்தம் செய்ய வேண்டும்.

வருகிற ஜூலை 22, 23 ஆம் தேதிகளில் மாநிலத்தினுடைய செயற்குழுக் கூட்டம் கொடைக்கானலில் நடைபெற உள்ளது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்த அரசு முறைப்படுத்த வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்களை எடுக்க இருக்கிறோம்.

மேலும், கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தையும் அறிவிப்பதற்கு தயாராக இருக்கிறோம். வணிகர்களின் பாதுகாப்பு என்பது பல இடங்களில் அச்சுறுத்தல்கள் இருந்தாலும் போர்க்கால அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பதை முறைப்படுத்தி வருகின்றோம். இதற்காக அரசும், பேரமைப்பு நிர்வாகிகளையும் இணைத்து கொண்டு கமிட்டி அமைத்து வருகிறது. கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் தான் இருக்க வேண்டும் என்பதில் 100 சதவீதம் வணிகர் பேரமைப்பு உறுதியாக உள்ளது. அதற்கான பணி விரைந்து நடைபெறும் என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தலைவர் மண்ணுலிங்கம், செயலாளர்  நாகராஜ், பொருளாளர் கணேசன், நிர்வாக செயலாளர்  அன்பு, செய்தி தொடர்பாளர் முரளிதரன், மாநில இணைச் செயலாளர்  செந்தில்மாறன், முன்னாள் திருவண்ணாமலை தாலுகா வியாபாரிகள் சங்கச் செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top