Close
ஜூன் 18, 2025 8:14 மணி

வடகலை, தென்கலை மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்: நீதிபதி அறிவுறுத்தல்

வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்று இரு பிரிவினருக்கும் நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள 18 திவ்யதேசங்களில் ஒன்றான சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீபப்பிரகாசர் கோயில் விழாக்களின்போது, கோயிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாழி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்து கோயில் செயல் அலுவலர் உத்தரவிட்டார்.

கோயில் செயல் அலுவலர் உத்தரவை எதிர்த்து, தென்கலை பிரிவைச் சேர்ந்த ஸ்ரீரங்காச்சாரி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயிலில் தென்கலை மந்திரம் பாட அனுமதியளித்து 1915ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 1918ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது. தீர்ப்பை அமல்படுத்தக் கோரி சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

மேலும், இந்த கோயில் விழாக்களின் போது வடகலை – தென்கலை பிரிவினர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்ததால், விழாக்கள் அமைதியாக நடக்க, கோயில் செயல் அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, நீதிபதி சுட்டிக்காட்டினார்.

வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பின் இரு இதழ்கள். இரு பிரிவுகளும் பெருமாளுக்கு சொந்தமானவை. இரு பிரிவுகளின் குருமார்களும் பெருமாளின் பாத கமலத்தில் இளைப்பாறும் நிலையில், அவர்களின் சீடர்கள் குருக்களின் பெயரால் மோதல்களை தவிர்த்து, ஒன்று சேர்ந்து குருக்களின் பாதைக்கு கௌரவம் அளித்து நம்பிக்கை பாதையில் நடைபோட வேண்டும் என இரு பிரிவினருக்கும் நீதிபதி அறிவுரை வழங்கினார்.

தீர்ப்பை ஒரு கவிதைத் தொனியில் முடித்த, நீதிபதி வெங்கடேஷ்

வடகலை மற்றும் தென்கலை, ஒரே தண்டில் இரண்டு இதழ்கள்,

இரண்டும் வெங்கடேஸ்வர பெருமாளைத் தேடுகின்றன,

இரண்டும் அவருக்குச் சொந்தமானவை.

ஆச்சார்யர்களின் பெயரில்,

சண்டைகள் இன்னும் எரிகின்றன,

இருப்பினும், அந்த ஞான ஆன்மாக்கள் இப்போது

இறைவனின் தூய ஒளியில் மூழ்குகின்றன.

அவர்களின் பயணங்கள்

அவரது தாமரை பாதங்களில்

மிகவும் பிரமாண்டமாக முடிந்தது,

அதே நேரத்தில் அவர்களின் குழந்தைகளாகிய நாம்

இன்னும் மணலில் கோடுகளை வரைகிறோம்.

அவர்களின் பாதையை மதிக்கிறோம்,

பழைய பிரிவுகளை நிறுத்துவோம்

– நம்பிக்கையிலும் அமைதியிலும்

ஒன்றாக நடப்போம்.” 

வடகலை – தென்கலை: வேறுபாடு என்ன?

வடகலையார், தென்கலையார் இருவருமே ராமாநுஜரையே தங்கள் முழுமுதல் ஆசானாகக் கருதுகிறார்கள்.

திவ்யப் பிரபந்தங்களைத் தொகுத்த நாதமுனிகளின் சீட பரம்பரையில் வந்த ராமாநுஜர், பிரபந்தங்களை ராகத்தோடு, நான்மறைகள் போன்று ஓதும் முறையை எல்லா வைணவக் கோயில்களிலும் அறிமுகப்படுத்தினார்.

மேலும் வடமொழி ஸ்தோத்திரங்களோடு பிரபந்தங்களையும் கருவறையில் ஓதும் வழக்கு முறைகளையும், பெருமாள் வீதிவலம் வரும் பொழுது, பெருமாளுக்கு முன் பிரபந்தங்களை ஓதும் கோஷ்டிக்கு இடம் கொடுத்து, வேதம் ஓதும் கோஷ்டியை பெருமாளைப் பின்தொடரச் செய்ததும், ராமானுஜர் தோற்றுவித்த மரபே.

இன்றளவும் ராமாநுஜ சம்பிரதாயத்தைப் பின்பற்றும் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் உள்ள கோயில்கள் உட்பட, எல்லா வைணவக் கோயில்களிலும் இந்த மரபு இம்மி பிசகாமல் நடைமுறைப்படுத்தப் படுகிறது.

திருப்பதியாக இருந்தாலும், திருவரங்கமாக இருந்தாலும், மேல்கோட்டையாக இருந்தாலும் எல்லா வைணவக் கோயில்களிலும் தமிழ் வழிபாடு இன்றியமையாதது. திருமலையில் ஒவ்வொரு நாளும் விடியலில் கோயில் கருவறையையே ஜீயர் திவ்யப் பிரபந்தங்களை ஓதித்தான் திறக்கிறார். அதற்குப் பிறகுதான் மற்ற வழிபாடுகளெல்லாம்.

வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும் பகல் பத்து – இராப்பத்து என்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுவது எல்லா வைணவக் கோயில்களிலும் தொன்றுதொட்டு நிலவி வரும் மரபு.

பகல்பத்து விழாவில் மிக முக்கியமான  ‘வேதசாம்யம்’ என்றழைக்கப்படும் மறை நிகர் பகர்தல் என்கிற நிகழ்வில், தமிழ் மறைகளான திவ்யப் பிரபந்தங்களை நான்மறைகளுக்கு நிகராக பெருமாள் அறிவிக்கும் காட்சி நடிக்கப்பட்டு அரங்கேற்றப்படுகிறது.

வடகலையார் பராமரிப்பிலுள்ள திருஎவ்வுள் என்கின்ற திருவள்ளூராக இருந்தாலும் சரி, தென்கலையார் நிர்வாகத்திலுள்ள திருவல்லிக்கேணியாக இருந்தாலும் சரி, பகல் பத்து விழா நடைமுறைகளில் எந்த வேறுபாடுமில்லை.

வடகலை மரபை தனி மரபாகத் தோற்றுவித்த வேதாந்த தேசிகர் (13-14 ஆம் நூற்றாண்டு) வடமொழியில் எழுதிய துதிப் பாடல்கள் 28. அவர் தமிழில் எழுதிய துதிப் பாடல்கள் 24. பிரபந்தங்களைத் துதிக்கும் அவர் பிரபந்தங்களினால்தான்  ‘புரியாத நான்மறைகளும் கற்றுத் தெளிந்தொம்’ என்று கூறியுள்ளார்.

அதேபோல் தென்கலை மரபைத் தோற்றுவித்த மணவாள மாமுனிகளும் (14ஆம் நூற்றாண்டு) வடமொழியில் சிறந்த நூல்களை இயற்றியுள்ளார்.

இத்தனைக்கும் பிறகு,  ‘வடக்கு- தெற்கு பிரிவினை’ ஏன்? வடகலை மரபை போதித்த வேதாந்ததேசிகர் வாழ்ந்தது காஞ்சியில். தென்கலை மரபை போதித்த மணவாள மாமுனிகள் வாழ்ந்தது திருவரங்கத்தில். அதாவது  ‘காஞ்சிக்குத் தெற்கே’. வடக்குத் திருமடத்தார்களும் தென் திருமடத்தார்களும் பிற்காலத்தில் முறையே வடகலை, தென்கலை என்றழைக்கப்பட்டனர்.

இவர்கள் சாற்றிக் கொள்ளும் திருமண் வடிவைத் தவிர, இரண்டு மரபுகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகள் பெரும்பாலும் ராமாநுஜரின் சொற்களையும் விசிஷ்டாத்வைத தத்துவக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வதிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே.

இப்பொழுது அடித்துக்கொள்ளும் வடகலை – தென்கலையார்களில் பெரும்பாலோருக்கு இந்த வேறுபாடுகளைப் பற்றித் தெரியுமா என்பது ஐயமே!

வடகலையார், தென்கலையார் மோதல் கோப்பு படம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top