காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடை கோடி பகுதியாகவும், சென்னையின் புறநகர் பகுதியாக அமைந்துள்ளது மாங்காடு பகுதி. மாங்காடு நகராட்சி மூலம் நாள்தோறும் பல டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மாங்காடு – கோவூர் சாலையில் சுந்தரேசர் திருக்கோயிலுக்கு சொந்தமான 14 ஏக்கர் பரப்பளவு காலி இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் அந்த சாலை வழியை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சுகாதார சீர்கேடும், பிளாஸ்டிக் பேப்பர்கள் காற்றில் பறந்தும், கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயங்கள் ஏற்படுத்தி வருவதாக தொடர் புகார்களும் மாவட்ட ஆட்சியருக்கு வந்தது.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தியுடன் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பல கிலோமீட்டர் தூரம் குப்பையில் சிதறி கிடப்பதை கண்டு உடனடியாக அதனை அகற்ற மாங்காடு நகராட்சிக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக 126 பணியாளர்கள் மூலம் 1272 டன் குப்பைகள் 64 முறை டார்ஸ் லாரிகளால் அகற்றப்பட்டு ஜெசிபி உதவியுடன் அப்பகுதி சம தள படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகிழும் , வேப்பிலை, பூவரசு, கொய்யா, ஆணை குண்டுமணி உள்ளிட்ட மர வகைகள் சுமார் 200க்கும் மேற்பட்டவை அப்பகுதியில் நடவு செய்யப்பட்டு தற்போது அப்பகுதியை சோலைவனமாக மாறி வருகிறது.
மேலும் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு இயற்கை சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்த உள்ளதாகவும் இதனை மீறி அப்பகுதியில் குப்பை கொட்டுவோரை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே என இருந்த காட்சி தற்போது குப்பைமேடு நந்தவனமாக மாறி தற்போது அப்பகுதியை கடந்து செல்வோர்க்கு எழில் சோலை வனமாக காட்சி தெரிவதாகவும், இச் செயலுக்கு பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.




