திருவண்ணாமலை அருகே வகுப்பறையில் ஏற்பட்ட திடீர் துர்நாற்றத்தால் அரசு பள்ளி மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலைமாவட்டம் கலசபாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 400 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்,
இதில் 8 ஆம் வகுப்பு பயிலும் 5 மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் திடீரென துர்நாற்றம் வீசியதில் மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாணவிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவலறிந்த கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா், மருத்துவா்களிடம் சிகிச்சை விவரம் கேட்டறிந்தாா்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவிகளை நேரில் சந்தித்து மருத்துவர்களிடம் மாணவியர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார், மாணவிகள் நல்ல நிலையில் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு வந்திருந்த மாணவிகளின் பெற்றோர் இடத்தில் பிள்ளைகள் நலமுடனும் பாதுகாப்பான முறையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உடனடியாக அவர்கள் நலமுடன் வீடு திரும்புவார்கள் என்று பெற்றோர்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனடியாக பள்ளிக்கு நேரடியாக சென்று பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இச்சம்பவம், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் திடீரென துர்நாற்றம் வீசியதற்கான காரணம் என்ன? எங்கிருந்து துர்நாற்றம் வீசியது? என்பது குறித்து பள்ளி நிர்வாகம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.




