Close
மார்ச் 7, 2026 4:22 மணி

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்: தள்ளுமுள்ளு

தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள்

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

வழக்கமாக சனி,  ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

அந்த வகையில்,  சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக நேற்றும், நேற்று முன்தினமும் அதிகளவில் பக்தர்கள் வந்தனர். குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது.

நேற்று அதிகாலை கோயிலில் நடை திறக்கும் போதே, தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்தது. காலை 10 மணிக்கு ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் சென்று தரிசனம் செய்ய சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா்.

இதேபோல, கோயிலில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கட்டண தரிசன வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தா்கள் வரிசையில் நின்றனா். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்..

தள்ளுமுள்ளு 

தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியதால், கட்டண தரிசன வரிசை அனுமதிக்கப்படும் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலில், கிளி கோபுரம் நுழைவு வாயில் போன்ற இடங்களில் பக்தர்களிடையே கடும் நெரிசலும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இரும்பு தடுப்புகளை தாண்டி ஒருவருக்கொருவர் முண்டி அடித்துக்கொண்டு வரிசையில் செல்ல முயன்றதால், நிலை தடுமாறி சில பக்தர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னுரிமை தரிசனம் எனும் பெயரில் மாற்றுப்பாதை வழியாக சிலரை அழைத்துச் சென்றதால், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலில் அங்கிருந்த ஊழியர்களிடம் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நெரிசல்

பக்தர்கள் வருகை அதிகரித்ததால், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் நெரிசல் நகரின் பல பகுதிகளில் காணப்பட்டது. மாட வீதி, சின்னக்கடை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கார், வேன்கள் அனுமதிக்கப்படவில்லை.

பெரும்பாலான குறுக்கு சாலைகளில், வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top