சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா.
ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்றைய தினத்தில் தான் நடராஜர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.
உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாத ஆனி திருமஞ்சனம் என ஆண்டுக்கு 2 முறை கோயிலின் 2ஆம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு 5ஆம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
அதன்படி, நேற்று இரவு சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து சுவாமி புறப்பாடு நடைபெற்று ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளினார்.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி, அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அரோகரா, அரோகரா, என்ற கோஷம் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை 9.30 மணிக்கு மேல் நடராஜ பெருமான் திருக்கோயிலின் திருமஞ்சன கோபுர வாசல் வழியாக வெளியே வந்து நான்கு மாட வீதிகளைச் சுற்றி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
1000 கால் மண்டபம் புறப்பட்ட சிவகாம சுந்தரி உடனுறை நடராஜர்




