Close
மார்ச் 7, 2026 4:58 மணி

வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு..!

தார் சாலை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக செயல்படுத்தபட்டு வரும் வளர்ச்சி பணிகளை அனைத்து ஒன்றியங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை கூட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தும் கிராமங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கிய பங்காற்றி வருகிறது.  இத்திட்டங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு பணிகள் முக்கியமானதாகும். இதன் மூலம் திட்டங்கள் முறையாக செயல்படுத்தபடுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளிவாகை ஊராட்சியில் 2024- 25ம் நிதியாண்டின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யபடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், வள்ளிவாகை ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.53.52 லட்சம் மதிப்பீட்டில் வள்ளிநகர் முதல் வேடியப்பன் நகர் வரை புதிய தார்சாலை அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டு சாலை முறையாக அமைக்கப்படுகிறதா என பரிசோதனை கருவிகளின் மூலம் ஆய்வு மேற்கொண்டு பணியினை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, சானாந்தல் ஊராட்சியில் 2024- 25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.68 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் குறித்தும், எவ்வளவு நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என கேட்டறிந்து மரக்கன்றினை முறையாக பாரமரித்து வளர்க்க வேண்டும் என்றார்.

முன்னதாக, மல்லவாடி ஊராட்சியில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த மறுவாழ்வு இல்லம் 1973ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞரால் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில், தற்போது 33 தொழுநோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தங்கும் வசதி மற்றும் உணவின் தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தொழுநோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top