நாமக்கல்:
நாமக்கல் மாநகராட்சியில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் தூசூர் ஏரி தண்ணீர் மாசடைந்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தூசூர், கொடிக்கால்புதூர், சின்னக்காவூர், பாலப்பட்டி, கணவாய்ப்படி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பøõளயம், பொம்மசமுத்திரம், அலங்காநத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏவை சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக தூசூர் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை வாழ்வாதாரமாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களும், பொதுமக்களும் உள்ளனர்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, சுத்திகரிக்கப்படாத சாக்கடை கழிவு நீர், ரசாயணக் கழிவுகளுடன் தூசூர் ஏரியில் கலந்து வருகிறது. இதனால் எங்கள் கிராமங்களில் விவசாயம் முழுமையாக பாழ்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர் மாசடைந்து, ஏராளமான தொற்று நோய் பரவி வருகிறது. இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
எனவே, நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் ரசாயன கழிவுகள் தூசூர் ஏரியில் கலப்பதை தடை செய்ய வேண்டும். மேலும், நாமக்கல் மாநகராட்சி சார்பில், உடனடியாக நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட, புதிய அதிநவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, கழிவு நீரை முழுமையாக சுத்திகரிப்பு செய்து, எருமப்பட்டி ஒன்றியத்தில் விவசாயத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தையும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கான குடிநீரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.




