Close
மார்ச் 7, 2026 3:14 மணி

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்: சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள்

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

வழக்கமாக சனி,  ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

அந்த வகையில்,  சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக நேற்றும், நேற்று முன்தினமும் அதிகளவில் பக்தர்கள் வந்தனர். குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும் போதே தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. பின்னர், படிப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கட்டண தரிசனம் அனுமதிக்கப்பட்ட அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலில் இருந்து, திருக்கோயில் வட ஒத்தைவாடை தெரு வழியாக தேரடி வீதி வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. அதேபோல், பொது தரிசன வரிசை அனுமதிக்கப்பட்ட ராஜகோபுரம் வழியாகயும் கூட்டம் அலைமோதியது.

அதனால், சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தவித்தனர். மேலும், அம்மணி அம்மன் நுழைவு வாயிலில் கூட்டம் குவிந்ததால், நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பக்தர்கள் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

முன்னுரிமை தரிசனம் எனும் பெயரில் மாற்றுப்பாதை வழியாக சிலரை அழைத்துச் சென்றதால், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலில் அங்கிருந்த ஊழியர்களிடம் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, இடுக்கு பிள்ளையார் சன்னதி துவாரம் வழியாக நுழைந்து தரிசனம் செய்தனர். மோட்ச துவார சன்னதி என ஆந்திர மாநில பக்தர்களால் அழைக்கப்படும் இடுக்கு பிள்ளையார் கோயில் சமீபகாலமாக வெகுவாக பிரபலம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து நெரிசல்

மேலும், வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்களின் வருகையால், திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்திருந்த நிலையிலும், நகரின் பெரும்பாலான சாலைகளில் அனுமதியின்றி வாகனங்கள் நுழைந்ததால், பக்தர்கள் தவித்தனர்.

பெரும்பாலான குறுக்கு சாலைகளில், வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இடுக்கு பிள்ளையார் கோவில்
இடுக்கு பிள்ளையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top