திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு மாநில செயலாளர் சேகர் தலைமைதாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலைவகிக்க மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர் அனைவரையும் வரவேற்றார்.
விரல் ரேகை பதிவு ஆதார் சரிபார்ப்பு 40 சதவிதம் மீண்டும் நடைமுறைப்படுத்துதல், டிஎன்சிஎஸ்சி எடை தராசும் அலுவலக கணினியோடு இணைத்து ரசீது வழங்கிய பின்பு நியாயவிலைக்கடை எடைத் தராசை (பிஒஎஸ்) விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும், பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களைபொட்டலமாக வழங்கப்படவேண்டும்,
ஐஏஎஸ் தலைமையில் ஊதியக்குழு அமைத்து 9வது மாநில ஊதிய மாற்றக்குழுவுடன் சேர்த்திட வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளர் (உதவியாளர்) நியமனம் செய்திட வேண்டும், நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்படும் அரிசி, துவரம் பருப்பு போன்ற இனங்களுக்கு சேதாரகழிவு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் விற்பனையாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.




