Close
மார்ச் 7, 2026 4:26 மணி

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வுக்கு செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுப்பா? அமைச்சர் விளக்கம்

ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அது குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பராசக்தி கல்லூரியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.

அப்போது கல்லூரியின் அடிப்படை கட்டமைப்பு மாணவிகளுக்கான கல்வி வசதி உள்ளிட்டவற்றை சேகர் பாபு கேட்டறிந்தார். ஆய்வகம் மற்றும் நூலகங்களில் ஆய்வு நடத்திய அமைச்சர் அங்குள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதிகாரிகளை கண்டித்தார்.

மேலும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் தங்களது கோரிக்கைகளை வழங்குமாறும் விரைவில் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிற போது இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடத்தப்படும் கல்லூரி மற்றும் பள்ளிகளை ஆய்வு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அதன் அடிப்படையில் பராசக்தி கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு நிர்வாகத்தினர் அளித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் வகுப்புகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டேன்.

மாணவிகளின் தேவைகள் அனைத்தையும் உணர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சேகர்பாபு , இது சம்பந்தமாக செல்வப் பெருந்தகையுடன் பேசினேன். கோபுரத்துக்கு செல்லும்போது முதலில் வந்தவர்கள் மேலே சென்றுள்ளார்கள். பின்னால் செல்வப் பெருந்தகை வந்த போது அவர் நிறுத்தப்பட்டு இருக்கிறார். பின்னர் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டு அவரும் மேலே சென்றுள்ளார் என தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் பல ஆண்டு ஆண்டுகால போராட்டத்துக்கு விடிவை தந்துள்ளோம். சமூக நீதி காப்பாற்றப்படுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பல சதிகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்களை நடத்தி நடைமுறைப்படுத்தினோம் என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top