தென்காசி மாவட்டம் குற்றாலம் இயற்கையான அருவிகள் அமைந்த சுற்றுலா தலமாகும்.குற்றாலத்திற்கு கார் பேருந்து வேன் பைக் என தமிழகம் முழுவதும் இருந்தும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் கூட சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
ஆனால் திருவனந்தபுரத்தைச் சார்ந்த இக்பால், சந்தீப் ஆகிய இரண்டு இளைஞர்கள் இன்றைய இளைய சமுதாயம் மத்தியில் பரவி வரும் மதுப்பழக்கம் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அதற்காக அவர்கள் சைக்கிளிலே திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 125 கிலோமீட்டர் தூரம் உள்ள குற்றாலம் வரை வந்தனர். வரும் வழியில் இளைஞர்களை சந்தித்து போதை பொருள் விழிப்புணர்வு பிரசாரத்தை செய்ததுடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சைக்கிள் பயணம் உதவும் என்றும் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இன்று அந்த இளைஞர்கள் குற்றாலம் வந்தடைந்தனர். குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அவர்கள் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இளைஞர்களின் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் வெகுவாக கவனத்தைக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.




