Close
மார்ச் 7, 2026 3:17 மணி

உங்களுடன் ஸ்டாலின் விண்ணப்பம் வழங்கும் பணி : ஆட்சியர் ஆய்வு

விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ்

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் நடைபெறும் விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்,பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வரின் ஆணையின்படி தமிழகத்தில் உள்ள நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்ட முகாம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் நடைபெற உள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நகா்புற பகுதிகளில் 80 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 307 முகாம்களும் நடத்தப்பட உள்ளன. இப்பணியில் சுமாா் 1500 தன்னாா்வலா்கள் ஈடுபடவுள்ளனா்.

நகா்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள தன்னாா்வலா்கள் மூலம் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று தகவல் கையேடுகள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவில் வீடுகளில் தன்னாா்வலா்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,

தமிழகத்தில் உள்ள அனைத்து நகர பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 387 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை, வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதல் முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் தினமும் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த நகர்புறப் பகுதிகளில் 80 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 307 முகாம்களும் நடைபெறும். நகர்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அதோடு, முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத்தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top