Close
மார்ச் 7, 2026 2:37 மணி

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவம்: ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி

அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. அதையொட்டி, ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனிமாத பிரம்மோற்சவ விழாவும் ஒன்று. சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான (தட்சிணாயனம்) ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.

அதன்படி, தட்சிணாயண புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அப்போது, திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் பவனி வந்து காட்சியளித்தனர். ஆனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, கடந்த 10 நாட்களாக அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகளும், மாடவீதியில் சுவாமி திருவீதி உலாவும் நடந்து வந்தது. மேலும், கடந்த 12ம் தேதி ஆனி திருமஞ்சனம் விமரிசையாக நடந்தது.

இந்நிலையில், ஆனி பிரமோற்சவ விழாவின் நிறைவாக நேற்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

பகல் 12 மணியளவில் ஐயங்குள வீதியில் உள்ள ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது. அப்போது, ஐயங்குளம் அருகே அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்,  அலங்கார ரூபத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top