Close
மார்ச் 7, 2026 4:41 மணி

தலைமை ஆசிரியா்களுடன் மாநில அளவிலான அடைவுத் தோ்வு ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு..!

கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் தலைமை ஆசிரியா்களுடன் மாநில அளவிலான அடைவுத் தோ்வு குறித்து ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா். அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசியாதவது:

தமிழக முதல்வா் வழிகாட்டுதலின்படி, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பள்ளி மாணவா்களின் கற்றல் திறன் மற்றும் இடைநிற்றலை தடுத்தல், பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மாணவா்களுக்கு அறிவு சாா்ந்த கல்வி கற்பித்தலை ஊக்கப்படுத்துவதே இக்கூட்டத்தின் நோக்கமாகும். நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறன், இடைநிற்றல் தவிர்த்தல், தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு உள்ளிட்ட துறை சார்ந்த பணிகள் தொடர்பாக சமீபத்தில் கல்வி அலுவலர்களுடன் ஆய்வுகளை செய்தோம்.

அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறேன். அதன்படி, 13வது மாவட்டமாக இந்த ஆய்வு கூட்டம் இங்கு நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் மாநில அடைவு தோ்வில் 9-ஆவது இடத்தை பெற்றிருந்தாலும், அடைவு திறனில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களான ஜவ்வாதுமலை, வெம்பாக்கம், திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி ஆசிரியா்கள் மாணவா்களின் கற்றல் திறனில் கவனம் செலுத்த வேண்டும். தலைமை ஆசிரியா்களும் கண்காணித்து மாணவா்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவர வேண்டும்.

மாவட்ட நிா்வாகமும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், தோ்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மணர்கேனி ஆப் மூலம் எளிய முறையில் சொல்லித் தருகிறோம். மெல்ல கற்கும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி, சாதாரண நிலைக்கு கொண்டுவர வேண்டும். ஹைடெக் லேப் வசதியை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமின்றி, நடுநிலைப் பள்ளிகளிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போர்ட் வசதி அனைத்து நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கும் கொண்டு வரப்படுகிறது. பள்ளி சூழலில் தொழில்நுட்ப வசதியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல ரூ.65 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து, 2676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறையில் ஏற்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். ரூ.56 கோடி மதிப்பில் 880 பள்ளிகளில் ஆய்வக வசதிகள் தரம் உயர்த்தப்படுகிறது. அதேபோல், ரூ.160 கோடி மதிப்பில் 2000 பள்ளிகளில் புதிய ஐடெக் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படுகிறது. மாணவர்களுடைய கற்றல் மற்றும் அடைப்பு திறன்களை கணினி வழியாக அப்டேட் செய்கிறோம்.

வரும் 24ம் தேதி 2430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்க இருக்கிறார். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என சொல்ல இருக்கிறோம். காலிப் பணியிடம் இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை இருக்கும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியா்களுடன் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் கலந்துரையாடினாா்.

கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பால்ராஜ், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சுகப்பிரியா, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top