ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி வருகை தரும் திரளான பக்தர்கள், ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை 9.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்று கனகாபிசேகத்துடன் அபிஷேகங்கள் நிறைவு பெற்றது.
தொடர்ந்து, திரையிடப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருக்கோயில் உதவி கமிஷனர் இளையராஜா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நாமக்கல் கோட்டை பகுதியில் பக்தர்கள் நெரிசல் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.




