Close
மார்ச் 7, 2026 4:26 மணி

அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழா : குவிந்த பக்தா்கள்!

சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி மரத்தில், கோயிலில் பத்து நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

பரணி நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க விழாவுக்கான கொடியை ஏற்றிவைத்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது, விநாயகா், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

தொடா்ந்து, 10 நாள்கள் காலை, இரவு என இருவேளையும் விநாயகா், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்கள்.

இதில், முக்கிய நிகழ்வான பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா 10-ஆம் நாள் நடைபெறும்.

கோயிலில் பக்தா்கள் கூட்டம்

திருவண்ணாமலை  அண்ணாமலையார் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். தரிசனத்துக்காக 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில் அண்மைக்காலமாக பக்தா்கள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பௌா்ணமி நாள்களுக்கு இணையாக அரசு விடுமுறை நாள்களிலும், வார இறுதி நாள்களிலும் பக்தா்கள் தரிசனத்துக்காக வருகின்றனா்.

ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடகத்தில் இருந்து வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் குவிந்தனா். இதனிடையே, கோயிலில் ஆடிப்பூர விழா நடைபெற்று வருவதால் பக்தா்களின் வருகை மேலும் அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா்.

கோயில் வெளிப்பிரகாரத்தில் வட ஒத்தவாடை தெரு வரை தரிசன வரிசை நீண்டது. அதேபோல, பொது தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. பக்தா்கள் சுமாா் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயிலில் ஆடிப்பூர விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மேலும், காலை வேளையில் விநாயகா், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மகா தீபாராதனைக்குப் பிறகு கோயில் 3-ஆம் பிரகாரத்தை வலம் வந்து, மாடவீதிகளில் பவனி சென்றனா். அப்போது, ஏராளமான பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனா். அதேபோல, ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். இதனால், இடுக்கு பிள்ளையாா் கோயில், அஷ்ட லிங்க சந்நிதிகளிலும் தரிசனத்துக்காக பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

பக்தர்கள் வேதனை

இது குறித்து பக்தர்கள் தெரிவிக்கையில்,

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொள்ளும் அதே நேரத்தில் இடைத்தரகர்கள் மூலமாக இடையிடையே பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவது வேதனை அளிப்பதாகவும் , இதனை உடனடியாக தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தினால் விரைந்து தரிசனம் மேற்கொள்ள பக்தர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top