Close
மார்ச் 7, 2026 2:58 மணி

முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

2025 – 2026 ஆ ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 53 வகையான மாவட்ட அளவிலானப் போட்டிகள், மண்டல அளவில் 14 வகையான போட்டிகள், மொத்தமாக மாநில அளவில் 67 வகையான போட்டிகள் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் 2025 மாதத்தில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்படப்படவுள்ளது.

இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை http://cmtrophy.sdat.in மற்றும் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திட வேண்டும்.

மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், 2 ஆம் பரிசாக ரூ.75ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.

குழுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், 2 ஆம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், 3ஆம் பரிசாக ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் சீரியமுயற்சியால் இவ்வாண்டுக்கான தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது.

இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படஉள்ளது .

போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 16.08.2025 ஆகும். எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் http://cmtrophy.sdat.in மற்றும் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6.00 மணி வரை 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் பங்கேற்கவேண்டும் என்றும், போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ராமபிரதீபன், உதவி ஆட்சியர் பயிற்சி செல்வி அம்ருதா எஸ்.குமார், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் (பொ) சண்முகப்பிரியா மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top