துரிஞ்சாபுரம் அடுத்த எம். என்.பாளையம் ஊராட்சியில் ரூ 32.80 லட்சத்தில் புதிய 2 வகுப்பறைபள்ளி கட்டடத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.பி. அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அருணாச்சலம் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
நான் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய எம். என்.பாளையம் ஊராட்சிக்கு வந்தபோது அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து என்னிடம் எங்கள் பகுதியில் பள்ளி கட்டடங்கள் பழுதாகி உள்ளது, அதனால் எங்களுக்கு புதிய பள்ளிகக்கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலினிடமும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும் நான்தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன்.
அதன் அடிப்படையில் எம்.என். பாளையம் ஊராட்சிக்கு புதிய 2 வகுப்பறை பள்ளி கட்டடம் அமைப்பதற்கு ரூ 32.80 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பணிகள் துவங்கப்பட்டது. அதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இப்பொழுது பள்ளிக்கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும். மாணவர்களின் மிகப்பெரிய சொத்து கல்விதான், அதனால் அனைவரும் கட்டாயம் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும்.
படிக்கும் மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதில் படிக்கும் மாணவர்கள்மேல்படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது.
படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை, பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு சலுவைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினர்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கோபு, இன்ஜினியர்கள் அருணா, தமிழரசி, பிரசன்னா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார், துணை அமைப்பாளர் சக்திவேல், மாணவரணி அமைப்பாளர் குமரேசன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




