Close
மார்ச் 7, 2026 4:26 மணி

திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..!

சோற்று சட்டியுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கிட கோரி சோற்று சட்டியுடன் 2 ஆயிரம் தூய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் சோற்று சட்டியுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வே.முருகையன் தலைமை தாங்கினார். தனசேகர், தேவேந்திரன், வெங்கடேசன், குமரன், ஜெயராஜ், சிலம்பரசன்,, மணிகண்டன் கலைச்செல்வி, பிரமிளா, ஈஸ்வரி, கவிதா, மகாலட்சுமி, காந்திமதி ஆகியோர் முன்னிலை வகிக்க து.வேலுமயிலோன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் லட்சுமணன் துவக்கவுரையாற்றினார். தோழமை சங்கத்தை சேர்ந்த ராணி மகேஸ்வரன், முத்தையா, தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் ராஜேந்திரன் நிறைவுரையாற்றினார்.

மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளருக்கு மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட நிரந்தர பணியிடத்தில் பணிநியமனம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், அவ்வாறு நிரப்பும்போது தற்காலிகமாக பணிபுரியும் மேல்நிலைத்தொட்டி இயக்குநபர்கள் தூய்மைப்ப ணியாளர்களை இணைத்து வழங்க வேண்டும்,

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஊக்குநர்கள் மேல்நிலைத்தொட்டி இயக்குநபர்கள் தூய்மைப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளி சுகாதார பணியாளர்கள், கணினி இயக்குபர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் இஎஸ்ஐ, பிஎப், குடும்ப நல நிதி வழங்கிட வேண்டும்,

மேல்நிலைத்தொட்டி இயக்குநபர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு சத்துணவு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசு ஏற்றுக்கொண்ட 9 கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி சோற்று சட்டியுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top