நாமக்கல்:
தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவங்க அனுமதி அளித்த இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரை, ராஜேஷ்குமார் எம்.பி., நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்திய அளவில் கடந்த 7 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் கடந்த 33 ஆண்டகளாகவும், புதிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் துவக்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை இரண்டாகப் பிரித்து, நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி துவங்குவதற்கு, ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. நபார்டு வங்கியும் அங்கீகராம் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவக்கப்பட்டு, அதன் தலைவராக ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் மற்றும் இயக்குனர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த வங்கிக்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டு, மேலாண்மை இயக்குனர் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டுப்பாட்டில் உள்ள, 30 கூட்டுறவு வங்கி கிளை வங்கிகள் இனி நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும். விரைவில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டினை, தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் 33 வருடத்திற்கு பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஒப்புதல் வழங்கியதற்காக, மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்தில், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ராஜேஷ்வர் ராவ் மற்றும் நபார்டு வங்கியின் தலைவர் ஷாஜி ஆகியோரை, நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.




