Close
மார்ச் 7, 2026 6:30 மணி

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு திட்டங்கள் வீடு தேடி செல்கிறது : துணை சபாநாயகர்..!

பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய துணை சபாநாயகர் மற்றும் ஆட்சியர்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு திட்டங்கள் வீடு தேடி செல்கிறது, அதிகாரிகளை மக்கள் தேடி சென்ற காலம் மாறி தற்போது அதிகாரிகள் மக்களை தேடிச் சென்று துறைவாரியாக திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாலையனூா் ஊராட்சியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக பதிவு செய்யப்படுவதை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு புதிய குடும்ப அட்டைகளும், புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளும், பட்டா மாற்றத்துக்கான சான்றிதழ்களும், சொத்து வரி பெயா் மாற்றத்துக்கான சான்றிதழ்களும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டிற்கான அட்டைகளையும் வழங்கினா்.

நிகழ்ச்சியில் பேரவை துணை சபாநாயகர்  கு.பிச்சாண்டி பேசுகையில்,

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி துரிஞ்சாபுரம் வட்டாரத்துக்கு உள்பட்ட கமலபுத்தூா், காா்கோணம், கோவூா் ஆகிய மூன்று கிராம மக்கள் பயனடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.

முகாமில் மகளிா் உரிமைத்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட 46 சேவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டு, 45 நாள்களுக்குள் உரிய தீா்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் எல்லாருக்கும் இருக்கின்ற நீண்ட கால கோரிக்கைகள் நிவா்த்தி செய்யப்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு திட்டங்கள் வீடு தேடி செல்கிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோரிக்கை மனுக்கள் வழங்கும்போது உரிய ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும். வேளாண்துறை மூலம் அரசு திட்டங்களைப் பெற வேளாண் நிலங்கள் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படும், எனவே விவசாயிகள் தங்கள் நிலங்கள் குறித்த விவரங்களை உரிய ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளை மக்கள் தேடி சென்ற காலம் மாறி தற்போது அதிகாரிகள் மக்களை தேடிச் சென்று துறைவாரியாக திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் ராமஜெயம்,  துறை அலுவலா்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆரணியில்..

ஆரணி நகராட்சி கொசப்பாளையம் பகுதி தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா்.

ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வரவேற்றாா். ஆரணி வட்டாட்சியா் கௌரி, நகராட்சி ஆணையா் வேலவன், மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகராட்சி 17-ஆவது வாா்டு முதல் 21-ஆவது வாா்டு வரை உள்ள 5 வாா்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து உடனடி தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தனா்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், துறை அலுவலா்கள் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கிறாா்களா என ஆய்வு செய்தாா்.

மேலும், உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

முகாமில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top