நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு சன்சத் ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது. இந்த விருதை திருவண்ணாமலை திமுக எம்.பி, சி.என். அண்ணாதுரை பெற்றார்.
நாடாளுமன்றத்தில் சிறப்பாக பங்காற்றும் உறுப்பினர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ‘சன்சத் ரத்னா’ என்ற பெயரில் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதாவது நாடாளுமன்றத்தில் சிறந்த செயல்பாடு மற்றும் நிலையான பங்களிப்பை வழங்கிய உறுப்பினர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான ‘சன்சத் ரத்னா’ விருதுக்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் இருந்து 17 உறுப்பினர்கள், 2 நிலைக்குழு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (NCBC) தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தலைமையிலான நடுவர் குழுவால் விருதுக்கு தகுதியான நபர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரைக்கு மத்திய அரசின் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பி ஒருவர் இந்த விருதை பெறும் சிறப்பை பெற்றுள்ளார். தனிநபர் பிரிவின் கீழ் சிறந்த எம்.பியாக இந்த விருதுக்கு அண்ணாதுரை பரிந்துரைக்கப்பட்டிருந்தார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
16 மற்றும் 17-வது மக்களவை பதவி காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக கேரளாவின் ஆர்எஸ்பி கட்சியைச் சேர்ந்த என்.கே.பிரேமச்சந்திரன், மகாராஷ்டிராவின் என்சிபி கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே, மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீரங் அப்பா பார்னே ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
அவர்களைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த சி.என். அண்ணாதுரை, பாஜகவைச் சேர்ந்த ஸ்மிதா வாக், மேதா குல்கர்னி, பிரவீன் படேல், ரவி கிஷன், நிஷிகாந்த் துபே, பி.பி. சவுத்ரி, மதன் ரத்தோர் மற்றும் திலீப் சைகியா ஆகியோருக்கும், சிவசேனாவைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் மற்றும் நரேஷ் கண்பத் மாஸ்கே ஆகியோருக்கும், காங்கிரஸைச் சேர்ந்த வர்ஷா கெய்க்வாட் ஆகியோருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கான ‘சன்சத் ரத்னா’ விருதுகள் வழங்கப்பட்டன.




