Close
மார்ச் 7, 2026 4:26 மணி

திருவண்ணாமலைக்கு வெளி மாநில பக்தர்களின் படையெடுப்பு : விடுதிகளாக மாறிய வீடுகள்..!

கோப்பு படம்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.

வெளிமாநில பக்தர்களின் வருகை மிக அதிக அளவில் தற்போது இருப்பதால் திருவண்ணாமலையில் மூளை முடுக்கெல்லாம் தங்கும் விடுதிகள்     பெருகி வருகிறது.

வாடகை குடியிருப்பு வீடுகள் திருமண மண்டபங்கள் ஆகியவை தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுவிட்டன. மேலும் கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா பக்தர்கள் திருவண்ணாமலையில் வீட்டு மனைகளை அதிக அளவில் வாங்கி குவித்து வருகின்றனர். திருவண்ணாமலையில் வீட்டு மனைகளின் விலை தற்போது சென்னை விலையை மிஞ்சும் அளவில் உள்ளது.

தங்களது வீடுகளை விடுதிகளாக மாற்றுபவர்கள் எவரும் மாநகராட்சி இடம் எந்தவிதமான அனுமதியுமே பெற்றதாக தெரியவில்லை.

மாநகராட்சிக்கு தெரிவித்தால் வரி உயர்வு மின்சார கட்டணமும் உயரும் என்பதால் எதனையும் தெரிவிக்காமல் தங்களது வீடுகளை விடுதிகளாக மாற்றி வருகின்றனர்.

இவைகள் குறித்து முறையான விசாரணை செய்து விடுதிகளாக மாறியுள்ள வீடுகளை கண்டறிந்து முறைப்படுத்த வேண்டும் என பலமுறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வாறு வீடுகளை விடுதிகளாக மாற்றி உள்ளவர்கள் பாதுகாப்பிற்காக எவ்விதமான ஏற்பாடுகளும் செய்யவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மாத வாடகையை விட தின வாடகை அதிகமாக வருவதால் தங்களது வீடுகளை விடுதிகளாக மாற்றி வருவதால் தற்போது குடியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய சொல்லி வீட்டின் உரிமையாளர்கள் வற்புறுத்துவதாகவும் , வேறு எங்காவது வீடு கிடைக்குமா என்று தேடினால் திருவண்ணாமலை நகரத்தை தாண்டி தான் கிடைக்கிறது. அங்கும் வாடகை மிக அதிகமாக கூறுகிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் நிரந்தர தீர்வு காண வேண்டும் என வீடுகளில் குடியிருப்போர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ஆன்மீக நகருக்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து வாரம் தோறும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் திருவண்ணாமலை சுற்றுவட்டாரங்களில் வழிபாட்டு மன்றங்கள் அமைத்து ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கம் சாலை, பெரும்பாக்கம் சாலை, ரமணாஷ்ரமம் எதிர்புறம், வஊசி நகர், வேங்கைக்கால், பாலாஜி நகர் போன்ற இடங்களில் இவர்கள் தங்குவதால் வாடகை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதுவும் மாத வாடகை என்பதற்கு பதில் தினசரி வாடகை என்ற பெயரில் வாடகை வசூலிக்கும் வழக்கம் தொடங்கிவிட்டது. திருவண்ணாமலை மக்களின் புதிய பழக்கத்தால் இந்நகரை கொண்டு விவசாய பணிகள் உள்ளிட்ட கூலி வேலை செய்பவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

தற்போது திருவண்ணாமலையில் ஹோம் ஸ்டே என்ற பெயரில் அனுமதி பெறாமல் நூற்றுக்கணக்கான வீடுகளில் தின வாடகைக்கு பக்தர்களை தங்க வைக்கின்றனர்.

இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீட்டில் ஐந்து முதல் பத்து பேர் தங்க அனுமதிக்கப்படுகின்றன நாள் ஒன்றுக்கு 3000 முதல் 5000 வரை வாடகை வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தங்கும் பக்தர்களின் பெயர் முகவரி அடங்கிய பதிவேடுகள் எதுவும் பராமரிக்கப்படுவதில்லை. இந்த வீடுகளில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை.

திருவண்ணாமலை மாநகரில்  புற்றீசல் போல் அதிகரித்து வரும் அனுமதி பெறாத வீடுகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் முன்வர வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

தங்கும் விடுதி ரெசிடண்ஸி என்ற பெயரில் வாடகைக்குவிட்டால் மின் கட்டணம் தொடங்கி, வீட்டுவரி, தொழில்வரி என அனைத்தும் உயரக்கூடும் என்பதை உணர்ந்த மக்கள் அதை தவிர்க்கவே நாள் வாடகைக்கு வீடுகளை விடுகின்றனர். எனவே வெளிமாநில பக்தர்களின் தேவையை கவனத்தில் கொண்டு தாங்கும் விடுதிகளை அறநிலையத்துறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஆஸ்ரம தங்கும் விடுதிகள்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏராளமான ஆஸ்ரமங்கள் உள்ளன.
அதில் குறிப்பிட்ட சில ஆஸ்ரமங்கள் தங்கள் பக்தர்களுக்கு வழங்குவதற்காக விடுதிகளை அமைத்துள்ளனர்.
அந்த விடுதிகளில் தங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் சில ஆஸ்ரமங்களில், ஆஸ்ரம பூஜை மற்றும் அன்னதானம் ஆகியவற்றிற்கு பங்கு பெறுபவர்களுக்கு இலவசமாகவே ரூம்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே ஆஸ்ரமங்களில் ரூம்  கிடைப்பது சிக்கல் தான்.

தங்கும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை நீண்ட நாட்களாக தங்கும் விடுதி நடத்தி வரும் உரிமையாளர்கள் தெரிவிக்கையில் நாங்கள் அரசிடம் முறையாக அனுமதி பெற்று தக்க பாதுகாப்புடன் தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறோம்.
ஆனால் சில மாதங்களாக திருவண்ணாமலை மாநகரில் திடீர் திடீர் என்று வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றி வருகின்றனர். மேலும் அவர்கள் குறைந்த வாடகைக்கு பக்தர்களை தங்க வைக்கின்றனர் காரணம் அவர்களுக்கு வணிக மின்சார கட்டணம் மற்றும் மாநகராட்சி வரிகள் எதுவும் கிடையாது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top