அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பிரசித்தி பெற்றது ஆடிப்பூர விழா.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கடந்த 19ஆம் தேதி காலை உண்ணாமலை அம்மன் சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதில், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில், கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா ஆடிப்பூர பிரம்மோற்சவம் மட்டும் என்பது தனிச்சிறப்பாகும்.
அதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக பராசக்தி அம்மன் காலையும், மாலையும் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தீர்த்தவாரி
விழாவின் நிறைவாக, கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. வேத மந்திரங்களை முழங்கி தீர்த்தவாரி வழிபாட்டில் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர்.
வளைகாப்பு
ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாகக் கருதப்படக்கூடிய பராசக்தி அம்மன் வளைகாப்பு விழா, அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள வளைகாப்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வளைகாப்பு விழாவில் வளையல், குங்குமம், மஞ்சள், தாலிக் கயிறு போன்ற மங்கள பொருட்களை சிவாச்சாரியார்கள் அம்மனுக்குச் சாற்றினர்.
முன்னதாக, பராசக்தி அம்மனுக்கு சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க அரிசி மாவு, மஞ்சள் தூள், சீகாய், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர் மற்றும் சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை நடைபெற்றது. மேலும், பராசக்தி அம்மனுக்கு நடைபெற்ற வளைகாப்பு விழாவில் நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையலைப் பெற்று வழிபாடு செய்தனர்.
அபூர்வமான உற்சவம்
எல்லா அம்மன் கோவில்களிலுமே, வளைகாப்பு உற்சவமும் நடைபெறும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் இல்லாத ஒரு அபூர்வமான உற்சவம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரம் நாளன்று நிகழும் தெரியுமா?
எந்த சிவன் கோவில்களிலுமே இல்லாத ஒரு நடைமுறையாக, ஆடிப்பூரம் கொண்டாடப்படும் நாளன்று, உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு, தீமிதி திருவிழா நடைபெறும்.
பூக்குழி இறங்குவது, பூமிதி திருவிழா என்று கூறப்படும் தீமிதித் திருவிழா, அம்மன் கோவில்களில் மட்டுமே நடைபெறும் நிகழ்வாகும். ஆனால், உலகின் பிரசித்தி பெற்ற சிவலாயங்களில், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், அம்மன் சந்நிதி முன்பு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரம் நாளன்று தீமிதி திருவிழா நடைபெறும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அதன்படி நேற்று இரவு 12 மணி அளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதில் சுமார் 25 கிராமங்களை சேர்ந்த மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களை அம்பாளாக பாவித்து பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் புனித நீராடிய பின், அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களால் பரிவட்டம் கட்டப்பட்டது. பின் அம்பாள் சன்னதி முன்பு எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு எதிரே உள்ள தீக்குண்டத்தில் 3 முறை குயவர் இன மக்கள், உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.





