உசிலம்பட்டியில் 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்ககோரி, விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் உசிலம்பட்டியில் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு வைகை அணையிலிருந்து 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் மைய பகுதியான உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறப்பை வலியுறுத்தியும், ஆண்டுதோறும் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீரைத் திறந்து விட்டு நீர்பாசன திட்டமாக அறிவிக்க வேண்டும், 58 கிராம பாசன கால்வாய் மதகு 67 அடியில் உள்ளது. இதனை 60 அடியில் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், 58 கிராம பாசன கால்வாய் சங்கத்தினர் மற்றும் அதிமுக, பார்வர்ட் ப்ளாக் கட்சியினர், பாஜக, தவெக, தேமுதிக, விசிக, புரட்சி பாரதம், அமமுக, நாம் தமிழர், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அனைத்து கட்சியினர் சார்பில் சாலையில் அமர்ந்து பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக அரசு விரைவாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.
இதனால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.




