Close
மார்ச் 7, 2026 3:10 மணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தக்கார் பதவியேற்பு

கோவில் தக்காரராக பதவியேற்றுக்கொண்ட மீனாட்சி சுந்தரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் தக்காராக டாக்டர் மீனாட்சி சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு  திருக்கோவில் நிர்வாகத்தை கவனிப்பதற்காக தற்காலிகமாக தமிழக அரசின் சார்பில் தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் அறங்காவலர்களாக ஜீவானந்தம், ராஜாராம், மீனாட்சி சுந்தரம், பெருமாள், கோமதி குணசேகரன் ஆகியோர் இரண்டு வருடங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அரசியல் பின்னணி உள்ளவர்களை அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக டிவிஎஸ்.ராஜாராம் நியமிக்கப்பட்டார். அறங்காவலர் குழு பதவிக்காலம் 2 வருடம் என்பதால் அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு பதவி காலம் கடந்த ஜூலை முதல் வாரத்தோடு  முடிவடைந்தது.

புதிய அறங்காவலர் நியமனம் எப்போது என திருவண்ணாமலைக்கு வந்திருந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்ட போது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அறங்காவலர் குழு நியமனம் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய அறங்காவலர் குழு நியமிக்கப்படுவார்கள் அல்லது தக்கார் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் அறங்காவலராக பதவி வகித்த மீனாட்சி சுந்தரம் தக்காராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தக்காராக பொறுப்பேற்றுக் கொண்ட மீனாட்சி சுந்தரம், பிரபல நரம்பியல் டாக்டர். பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்தவர். சென்னையை சேர்ந்தவர்.  அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற அவரது சஷ்டியப்த பூர்த்தி (அறுபதாம் கல்யாணம்) விழாவில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

கோயிலின் அறங்காவலர் குழு நியமிக்கப்படும் வரை, அல்லது ஏதாவது காரணங்களால் அறங்காவலர் இல்லாவிட்டால், தற்காலிகமாக ஒருவரை தக்கார் (Trustee) ஆக நியமிப்பார்கள்.

அவர் கோயிலின் நிதி, சொத்துக்கள், மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை கவனித்துக்கொள்வார்.

அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டவுடன், தக்கார் பதவி முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த டாக்டர் மீனாட்சி சுந்தரம் முறைப்படி தக்காராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார் . புதிய தக்காராக பதவி ஏற்று கொண்ட டாக்டர் மீனாட்சி சுந்தரத்திற்கு மாநகர செயலாளர் கார்த்திகேயன் மாறன் பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கோவில் இணை ஆணையர் பரணிதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜாராம், குணசேகரன், சினம் பெருமாள், சிவாச்சாரியார்கள், கோயில் பணியாளர்கள் பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top