திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை ஆரணி வந்தவாசி கலசப்பாக்கம் போளூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்மன் உடனுறை மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் பௌர்ணமி என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்த நிலையில் நேற்று கனமழை பெய்ததால் பருவதமலை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வடபழனி மனைவி தங்கத்தமிழ், மனோகரன் மனைவி இந்திரா உட்பட 15 பேர் நேற்று முன்தினம் வேனில் பர்வதமலை கோயிலுக்கு வந்தனர். பின்னர், மலை மீது ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்த அவர்கள் இரவு அங்கேயே தங்கினர்.
தொடர்ந்து, நேற்று மாலை 6 மணி அளவில் அனைவரும் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அங்கு வீரபத்ர சுவாமி கோயில் மற்றும் பச்சையம்மன் கோயில் இடையே செய்யாற்றில் வெள்ளம் சேரும் ஓடை கால்வாய் அமைந்துள்ளது.
ஜவ்வாது மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அந்த ஓடை கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஓடையை கடந்து தான் அக்கரைக்கு செல்ல வேண்டும்.
எனவே, அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஓடை கால்வாயை கடந்து சென்றனர். அப்போது, வெள்ளத்தின் ஓட்டத்தில் நிலை தடுமாறிய தங்கத்தமிழ், இந்திரா ஆகிய இருவரும் அடித்து செல்லப்பட்டனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் சென்றவர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
உடனே இதுகுறித்து போளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
இரவு தேடும் பணி மேற்கொள்ள முடியாத நிலையில் இன்று காலை 6 மணி முதல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள சென்னாவரம், மருதாடு, தெள்ளூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமாா் 3.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.
சுமாா் 2 மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் தேரடி, கேவிடி நகா் விரிவு, ஆரணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கியது. சில இடங்களில் மழைநீருடன் கால்வாய் கழிவுநீா் கலந்து தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆரணி
ஆரணி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் ஆரணி-ஆற்காடு சாலையில் வெள்ளேரி பகுதியில் பலத்த மழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் சாய்ந்தது. ஆரணி -ஆற்காடு சாலையில் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் நெடுஞ்சாலைத்துறையினா்.
தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று
பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





