திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடியில் பிரசித்தி பெற்று விளங்கும் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் கிருத்திகை மற்றும் ஆடி, தை மாதங்களில் நடைபெறும் கிருத்திகை விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இது தவிர கந்தசஷ்டி, பங்குனிஉத்திரம் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடு தவிர பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
நாளை 53-ம் ஆண்டு ஆடிக் கிருத்திகை பெருவிழா விமரிசையாக நடக்கிறது. விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து விழாக் குழுவினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு அண்ணாமலையார் திருக்கோயில் இணைஆனையர் மற்றும் செயல் அலுவலர் பரணிதரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், உதவி ஆணையர் பாலாஜி, மேலாளர் செந்தில், மணியம் மகா முனி, ஒன்றிய ஆணையாளர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை சபாநாயகர் பிச்சாண்டியிடம் விழாக்குழுவினர் பேசுகையில், விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி, முடி காணிக்கை செலுத்துவதற்கான கொட்டகை அமைப்பது, சி.சி. டி.வி கேமரா பொருத்துவது, சுகாதார வசதி, தீயணைப்பு வசதி, போலீஸ் பாதுகாப்பு மற்றும் கோயிலை சுற்றிலும் சிமெண்ட் சாலை அமைப்பது, சுற்றுச்சுவர் கட்டுவது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர் .
கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவதற்கான யோசனைகளை கூட்டத்தில் பங்கேற்ற கோயில் இணைஆணையர், ஒன்றிய ஆணையாளர், கோயில் மணியம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் துணை சபாநாயகர் பிச்சாண்டி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கூறினார். மேலும் விழாவினை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அப்போது கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பணிகளை முடித்து வருகிற 2026-ம் ஆண்டு தை மாதம் (ஜனவரி) கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்றதலைவர்கள் சிவக்குமார், ஏழுமலை, நிர்வாகிகள் குணசேகரன், சம்பத்குமார், கோயில் அர்ச்சகர்கள் பாலாஜி , சசிகுமார் மற்றும் விழாக் குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




