Close
மார்ச் 7, 2026 4:17 மணி

திமுக கூட்டணியை மட்டுமே நம்பி உள்ளது, அதிமுக மக்களை நம்பி உள்ளது: எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், போளூர், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட இடங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் நிகழ்ச்சிக்காக அதிமுக பொதுச் செயலாளர் ,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சுற்று பயணம்  மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

திமுக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. மக்களின் நம்பிக்கையை துரோகம் செய்துள்ளது. இன்றைய நிலையில் விவசாயி, தொழிலாளர், இளைஞர், சிறு வணிகர் என யாரும் மகிழ்ச்சியுடன் இல்லை.

மின்சாரம், எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களை சிரமப்படுத்துகிறது. மாநில அரசு எந்தக் கட்டுப்பாடையும் எடுக்காமல் இருக்கிறது.  இளைஞர்களின் வேலைவாய்ப்பு நிலை மோசமாகி வருகிறது,

1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு அதை நிறைவேற்றவில்லை, தமிழக இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர்; ஆனால் திமுக அரசு வாக்குறுதி மீறி விலகியுள்ளது.

திமுக அதன் கூட்டணியை மட்டுமே நம்பி உள்ளது. ஆனால், அதிமுகவோ மக்களை நம்பி உள்ளது. கடுமையான வறட்சி, புயல், கொரோனா பாதிப்பு இருந்தும்கூட, அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. அதிமுக ஆட்சியில் கொரோனா பாதிப்பின்போது அம்மா உணவகம் உள்ளிட்டவை மூலம் நாளொன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவு வழங்கினோம்.

ஆனால், திமுக ஆட்சியிலோ விலைவாசி விண்ணை முட்டுகிறது. அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சிமென்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஆனால், திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. இதன் மூலம், நாட்டிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றிவிட்டது. மின் கட்டணம் 67 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. குப்பைக்குகூட வரி விதித்துவிட்டனா்.

அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 67 கலைக் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம், இந்தியாவிலேயே உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலை பெற்றது. மேலும், தேசிய விருதுகள் அதிகம் பெற்றதும் அதிமுக ஆட்சியில்தான். ஆனால், திமுக ஆட்சிக்கோ ஊழல் செய்வதற்குதான் விருது கிடைக்கும்.

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. ஒரு மதுப் புட்டிக்கு ரூ.10 அதிகம் வாங்குவதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் திமுக மேலிடத்துக்கு ரூ.22 ஆயிரம் கோடி சென்றுள்ளது. திமுக தோ்தலின்போது வெளியிட்ட 525 அறிவிப்புகளில் பல முக்கிய அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமலே உள்ளன.

அதிமுக கட்சி பொறுத்து வரையில் மக்களின் சொத்து. இதில் யார் வேண்டுமானாலும் கட்சியில் உறுப்பினர்கள் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் பெயரெடுத்து தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் என்னைபோன்று உயர்ந்த பதவிக்கு வரமுடியும்.

அதிமுக ஆட்சியில் இஸ்லாமியா் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். தீபாவளி பண்டிகைக்கு பெண்களுக்கு புடவை வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் அதிமுக திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், சேவூர் ராமச்சந்திரன், ஜெயசுதா, தூசி மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன், நகர செயலாளர் செல்வம், ஒன்றிய கழக  செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top