தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வெள்ளிக்கிழமை முதல் திருவண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து திங்கட்கிழமை அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து திருக்கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை தான் வரவேற்கிறேன்.
குடியரசுத் துணைத் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்தவர் வருவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சி.பி ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தை சேர்ந்த அத்தனை எம்.பிக்களும், கட்சி பேதமின்றி ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அப்போது சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு எதிராகக் காங்கிரஸ் தரப்பிலிருந்து துணை ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிடப் போவதாகச் செய்திகள் அடிபடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அது பற்றி தனக்குத் தெரியவில்லை என்று கூறினார்.
பின்னர் அங்கிருந்து காரில் கிரிவலம் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகரை தரிசித்து தொடர்ந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலைய அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அண்ணாமலையார் கோவில் தரிசனத்தின் போது மாவட்ட செயலாளர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், ஜெயசுதா, சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன், மாநகர செயலாளர் செல்வம், கலியபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.




