முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி திருவண்ணாமலை. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் இருவரும் ஒருவரைக் குறித்து ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள். ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் குறித்து மற்றொரு மகானிடம் கேட்டாராம் பக்தர் ஒருவர். “சுவாமி, சேஷாத்திரி சுவாமியைப் பைத்தியம் என்கிறார்களே..?” இதைக் கேட்ட அந்த மகான் சிரித்துவிட்டார்.
“ஆமாம், திருவண்ணாமலையில் மூன்று பைத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று, அண்ணாமலையார் என்கிற பைத்தியம்; இன்னொன்று சேஷாத்திரி சுவாமிகள் என்கிற பைத்தியம்; மூன்றாவது இந்தப் பைத்தியம்!” என்றாராம்.
அந்த மகான் வேறு யாருமல்ல. தான் யார் என்பதைத் தேடி, இளம் வயது முதலே அலைந்து திரிந்து தவம் புரிந்து தன்னைப் பரமாத்ம ஸ்வரூபமாகக் கண்டுகொண்ட ஸ்ரீ ரமண மகரிஷியே ஆவார்.
1879-ஆம் ஆண்டு திருச்சுழி கிராமத்தில் மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ ரமண பகவான். வேங்கடராமனாக பிறந்த ரமணர் சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். வேங்கடராமனுக்கு 12 வயது ஆனபோது அவரது தந்தை மரணம் அடைந்தார்.
அப்போதே அவரது மனதில், ‘மரணம் என்பது என்ன’, ‘மரணத்திற்குப் பிறகு அந்த உயிர் என்ன ஆகிறது எங்கே போகிறது’ என்ற கேள்விகள் அவருடைய மனதில் எழுந்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு தந்தையை இழந்ததால், சித்தப்பாவின் பொறுப்பில் விடப்பட்ட வேங்கடராமன், 1891-ஆம் ஆண்டு மதுரை சென்றார். அங்கு அவருக்கு கல்வியில் பெரிய அளவில் கவனம் செல்லவில்லை. அதன் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அவரை வெகுவாகக் கவர்ந்தது. அதிக நேரம் அந்தக் கோவிலிலேயே செலவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இனிமேல் தனது இருப்பிடம் திருவண்ணாமலை என்று முடிவு செய்து, விசேஷ வகுப்புக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, 3 ரூபாயை எடுத்துக்கொண்டு 1896-ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி திருவண்ணாமலைக்குப் புறப்பட்டு வந்தார்.
வழியில், கையில் இருந்த பணம் செலவானதால், மாம்பழப்பட்டு என்ற ஊரில் இருந்து திருக்கோவிலூர் வழியாக நடந்தே 1896-ம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி திருவண்ணாமலை வந்தடைந்தார்.
கட்டி இருந்த வேட்டியில் கோவணம் என்ற அளவுக்கு துணியைக் கிழித்து மற்றவற்றை குளத்தில் வீசினார். கோவணத்தை மட்டுமே அணிந்துகொண்டு, யாரிடமும் தீட்சை பெறாமல், தன்னைத்தானே துறவியாக அறிவித்துக்கொண்டார்.
திருவண்ணாமலை கோவிலுக்குள் சென்ற வேங்கடராமன், முதலில் சில நாட்கள் அங்குள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார். ஆனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் வரவே, யாருமே அதிக அளவில் வராத பாதாள லிங்கம் இருக்கும் அறைக்குள் சென்று அமர்ந்து தியானம் செய்தார்.
ரமணரை உலகிற்கு காட்டிய ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
ஒரு நாள் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பாதாள லிங்கத்தை காண்பித்து இதோ ஒரு அற்புத ஞானி உள்ளே தியானத்தில் உள்ளார். அவரை சென்று வணங்குங்கள் என்று கூறினார். உள்ளே சென்று பொதுமக்கள் பார்த்தபோது பாதாள லிங்கத்தில் தியான நிலையில் ரமண மகரிஷி இருந்துள்ளார். அவரை சுற்றி இருந்த மண் புற்றுக்களை அகற்றி அவரை வெளியே அழைத்து வந்தனர்.
பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாஸ்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலை அடிவாரத்தில் தனது தியானத்தை மேற்கொண்டார். அந்த இடமே தற்போது ரமணர் ஆசிரமமாக உள்ளது.
திருவண்ணாமலையில் தங்கி, பல லட்சம்பக்தர்களின் வாழ்வில் ஆன்மிக விளக்கை ஏற்றிவைத்த ஸ்ரீ ரமண மகரிஷி, 1950-ம் ஆண்டு இயற்கையோடு கலந்தார். கடந்த நூற்றாண்டில் கண்முன் வாழ்ந்த துறவி ஸ்ரீரமண மகரிஷி.
மகா கும்பாபிஷேகம்
பகவான் ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடா்ந்து கடந்த 18-ஆம் தேதி ஆஸ்ரமத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு முதல் கால பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், ஆச்சாா்ய ரித்திக் வா்ணம், மதுபா்க்கம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து ஸ்ரீ சுத்த ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.
19-ஆம் தேதி யாக சாலை பூஜை, ஜபம், கன்யா, சுவாஸினி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இரவில் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன.
20-ஆம் தேதி புதன்கிழமை காலை கோ பூஜை மற்றும் நான்காம் கால பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹுதி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சிவாச்சாரியா்கள் யாகசாலையில் உள்ள புனித நீரை தலையில் சுமந்தவாறு ரமணாஸ்ரமத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினா்.
தொடா்ந்து ரமண பகவான் சிலைக்கு ஆசிரமத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுத்து, வேத மந்திரங்கள் முழங்க ரமண பகவானுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
விழாவில், இசையமைப்பாளா் இளையராஜா, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் தலைவர் லாயர் சந்திரமோகன், யோகி ஸ்ரீ ராம் சுரத்குமார் ஆசிரம நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர் பிரகாஷ்,குரு தட்சிணாமூர்த்தி கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆறுமுகம் மற்றும்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ரமணாஸ்ரமத்தின் நிா்வாகிகள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.





