திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞரணி தலைவர் எஸ். ஜி. சூர்யாவுக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புதியதாக தமிழ்நாடு பாஜக மாநில இளைஞரணி தலைவராக எஸ்.ஜி. சூர்யாவை நியமித்துள்ளார். இவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் சார்பில் மரியாதைசெலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் திருவண்ணாமலை செங்கம் சாலையிலுள்ள ரமணர் ஆசிரமத்தில் நடந்த மகாகும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து 14 கி.மீ. தூரமுள்ள கிரிவலபாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டதோடு திருநேர் அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை ஆகிய சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையிலுள்ள தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
புதிதாக பாஜக மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட எஸ். ஜி. சூர்யாவிற்கு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே.ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு அண்ணாமலையார் படம் நினைவு பரிசாக வழங்கி பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கவிதா பிரதீஷ் டி. ஜெய்நாத் மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் அறவாழி ஐடி-விங் மாநில செயலாளர் பிரதீஷ்குமார் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் அஜீத்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.




