தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்காக நடைபெற்ற தெற்கு மண்டல பயிற்சி முகாமில் சந்திரனின் நிழல் விளையாட்டு நிகழ்வை வானியல் திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளதாக அறிவிப்பு!
வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9.57மணிக்கு ஆரம்பித்து செப்டம்பர் 8-ம் தேதி விடியர்காலை 1.26 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் நிழலில் சந்திரன் மறைந்து அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும். இது “ப்ளட் மூன்” என்றும் அழைக்கப்படுகிறது.
வானில் நடைபெறும் இந்த அதிசயத்தை காண தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் உள்ள கல்லூரியில் வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தெற்கு மண்டல பயிற்சி முகாம் நடைபெற்றது. மேலும் தென்காசி மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 இடங்களில் இதனை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் இந்த சந்திர கிரகணத்தை மக்கள் அனைவரும் சாதாரண கண்களால் பார்க்கலாம் எந்த வித அச்சமும் தேவையில்லை, கருவுற்ற பெண்கள் பார்க்கலாம், எப்போதும் போல அன்றாட வாழ்வில் ஈடுபடலாம் எந்தவித வதந்திகளையும் நம்ப வேண்டாம்.
இது வானில் நடைபெறும் நிழல் விளையாட்டு எனவும் அந்த வகையில் இது வானியல் திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் எனவும் பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது




