உசிலம்பட்டியில் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைகளில், பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், ஏற்கனவே உள்ள ஆள் பற்றாக்குறையை சரி செய்ய கோரியும், பாட்டில்களை திரும்ப பெற தனி ஊழியர்களை நியமித்து அவர்கள் மூலம் இந்த நடைமுறையை அமல் படுத்த கோரி இருந்தனர்.
இந்த நிலையில், இன்று அந்த நடைமுறை அமலுக்கு வந்ததை அடுத்து உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வந்த 20க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகளை அடைத்து டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, ஊழியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், இந்த பாட்டில்கள் திரும்ப பெறும் நடைமுறையால் பணிச்சுமை அதிகரிக்கும் என, டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டி கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.




