திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 6.18 கோடி செலுத்தியுள்ளனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்க கோவில்கள், திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
ரூ. 6.18 கோடி ரொக்கம்.
மாதம்தோறும் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகளில் உள்ள உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், ரூ, 6 கோடியே18 லட்சம் 53 ஆயிரத்து 550 பணம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
மேலும், 275 கிராம் தங்கம், 2 கிலோ 700 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது.
கோயில் இணை ஆணையா் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும், உண்டியல் எண்ணும் பணி முழுவதும் சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது.
பக்தர்கள் நேரடியாக பார்க்கும் வசதியாக திருக்கோயில் வலைதளத்தில் (யூடியூப்) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
அண்ணாமலையார் கோயில் வரலாற்றில், உண்டியல் காணிக்கை ரூ.6 கோடியை கடந்து இருப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.




