உசிலம்பட்டி நகராட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நகர் மன்ற தலைவி, தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் ஆணையுடன் வந்து, மீண்டும் பதவி ஏற்று மக்கள் பணி செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டி நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவியாக இருந்த சகுந்தலா, மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் மாதம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நகர் மன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க உத்தரவையும் சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் 26.08.2025 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி இன்று மீண்டும் நகர் மன்ற தலைவியாக பதிவியேற்று மக்கள் பணி செய்ய சகுந்தலா வந்த சூழலில், நகர் மன்ற தலைவர் அறையை பூட்டி வைத்துவிட்டு, நகராட்சி ஆணையாளர் வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நகர் மன்ற தலைவர் கூறுகையில், இரு தினங்களுக்கு முன்பே நீதிமன்ற உத்தரவை ஆணையாளரிடம் வழங்கிவிட்டு இன்று பதவியேற்றுக் கொள்ள வர உள்ளதாக கூறி சென்றிருந்த சூழலில், இன்று திடீரென அறையை பூட்டிவிட்டு செல்ல காரணம் என்ன? பதவியேற்று மக்கள் பணி செய்ய அனுமதி தரும் வரை காத்திருப்பேன் என்று கூறி அறை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.




