Close
மார்ச் 7, 2026 6:04 மணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் திடீர் தீ விபத்து: எரிந்த மூலிகை செடிகள்..!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பின்புறம் 2668 அடி உயரம் உள்ள மகா தீபம் ஏற்றும் மலை மிகவும் புனிதமான தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிவபெருமானின் அக்னி லிங்க வடிவாகப் போற்றப்படுகிறது.

இந்த மலை, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தியானத்திற்கு உகந்த இடமாகவும் கருதப்படுகிறது. புராணங்களின்படி, இம்மலையில் சிவனும் பார்வதியும் ஒளி வடிவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது, இதனால் இது அருணாச்சலம் என அழைக்கப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, மலை உச்சியில் பெரும் தீபம் ஏற்றப்படுகிறது, இது பக்தர்களை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாகும். மலை சுற்றி நடைபயணம் செய்யும் கிரிவலம், ஆன்மிகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கிரிவலத்தில் ஈடுபடுகின்றனர். 14 கி.மீ. சுற்றளவு கொண்ட இந்த கிரிவலம், மனதை அமைதிப்படுத்துவதாகவும், ஆன்மிக உணர்வை வளர்ப்பதாகவும் நம்பப்படுகிறது.

இம்மலை, யோகிகள் மற்றும் சித்தர்களின் தவ இடமாகவும் புகழ்பெற்றது.

காட்டுத்தீ

இந்நிலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. அடிப் பகுதியில் இருந்து சுமாா் 1500 அடிக்கு மேல் உள்ள பகுதியில் ஏழு சுனை என்று அழைக்கக்கூடிய மலையின் மையப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, உள்ளூர் மக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த மூன்று பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதியில் செங்குத்தான பாதைகளைத் தாண்டி தீயை அணைக்க கடுமையாகப் போராடினர். மாலை 7 மணியளவில் தீயின் தீவிரம் குறைந்தது.

இந்த விபத்தால் மலையின் சில பகுதிகளில் உள்ள தாவரங்கள், மூலிகை செடிகள் மற்றும் சிறு வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இருப்பினும், மனித உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏதும் பதிவாகவில்லை. அருணாச்சலேஸ்வரர் மலையில் மர்ம நபர்கள் சிலர் நெருப்பு வைத்ததால் இத்தகைய சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் மலை மீது ஏற வனத்துறை தவிா்த்து, மற்றவா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் மலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top